உள்ளூர் செய்திகள்
ரேசன் கடைகளுக்கு சமூதாயகூடத்தில் இடம் ஒதுக்க வேண்டும்-கவர்னரிடம் தமிழர் களம் மனு
வாடகை இடங்களில் இயங்கி வரும் ரேசன் கடைகளுக்கு, அங்கன்வாடி சமூதாயகூடத்தில் இடம் ஒதுக்க வேண்டும் என கவர்னரிடம் தமிழர் களம் மாநில செயலாளர் அழகர் மனு அளித்துள்ளார்.
புதுச்சேரி:
தமிழர் களம் மாநில செயலாளர் அழகர்
கவர்னருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
கடந்த ஆட்சியில் மத்திய அரசின் நேரடி பார்வையில் உள்ள புதுவை யூனியன் பிரதேசத்தில் மட்டும் ரேசன் கடைகள் ஒட்டு மொத்தமாக மூடப்பட்டது.
இந்த நிலையில் புதிய ஆட்சியில் தீபாவளி இலவச அரிசி, சர்க்கரையை ரேசன் கடைகள் மூலம் வழங்க போவதாக முதல்-அமைச்சர் அறிவித்தார்.
ரேசன் கடைகளை திறக்க ஊழியர்கள் முனைப்புடன் இருந்தும் 100-க்கும் மேற்பட்ட ரேசன் கடைகள் வாடகை கட்டிடத்தில் இயங்குவதால் வாடகை பாக்கி காரணமாக கடை திறக்க முடியாத சூழ்நிலை உள்ளது. ஆனாலும் கடை ஊழியர்களே கட்டிட உரிமையாளர்களிடம் கெஞ்சி கூத்தாடி கிடைத்த இடத்தில் தீபாவளி இலவச பொருட்களை வழங்கினர்.
நிரந்தரமின்றி வாடகையில் இயங்கும் ரேசன் கடைகளுக்கு அரசுக்கு சொந்தமான அங்கன்வாடி , சமுதாயநலக்கூடம் போன்ற இடங்களில் இடம் ஒதுக்கி கொடுக்க வேண்டும்.
மேலும் எதிர்வரும் காலங்களில் அனைத்து ரேசன் கடைகளும் அரசுக்கு சொந்தமான இடத்தில் போதுமான இடவசதியுடன் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அழகர் மனுவில் கூறியுள்ளார்.