உள்ளூர் செய்திகள்
கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை- கவர்னர் தமிழிசை பாராட்டு
கொரோனா பரவலை தடுக்க பொருளாதாரம்-உணர்வுகள் பாதிக்கப்படாமல் நடவடிக்கை எடுத்துள்ளதற்கு கவர்னர் தமிழிசை பாராட்டு தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை ரோட்டரி சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை உடல் உறுப்புகள் மற்றும் உபகரணங்கள் வழங்கும் விழா காராமணிக்குப்பம் முருகன் கோவிலில் நடைபெற்றது. கவர்னர் தமிழிசை பயனாளிகளுக்கு செயற்கை உடல் உறுப்புகள் வழங்கினார். அதைத்தொடர்ந்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
கொரோனா தொற்றின் வீரியம் குறைந்து வருகிறது. முதல்-அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து ஊரடங்கு இல்லாமலும், பொருளாதர பாதிப்பு இல்லாமலும், மக்கள் உணர்வு பாதிக்கப்படாமலும் எச்சரிக்கையுடன் புதுவையில் செயல்பட்டோம். இதனை பலர் விமர்சித்தனர்.கொரோனா 4-வது அலை வரலாம். ஆனால், இனி கொரோனாவுடன் வாழ பழகிக்கொள்ள வேண்டும். கொரோனாவிலிருந்து காக்க தடுப்பூசியே தீர்வு.
தடுப்பூசி கண்டுபிடிக்க உதவியோருக்கு பத்ம விருதுகளும் பிரதமரால் தரப்பட்டுள்ளன. தற்போது குழந்தைகளுக்காக ஐதராபாத் பயோடெக் நிறுவனம் சொட்டு மருந்து தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவுள்ளன. தமிழக பாடத்திட்டம் புதுவை, காரைக்காலில் பின்பற்றப்படுகிறது. இதனால் முதல்-அமைச்சர், கல்வி அமைச்சருடன் கலந்து ஆலோசித்து பள்ளி, கல்லூரிகள் திறப்பு தேதி பற்றி முடிவு எடுக்கப்படும்.
15 வயதுக்கு மேற் பட்ட சிறுவர்களில் பெரும் பாலானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. விரைவில் புதுவை, காரைக்காலில் பள்ளிகள் திறப்பது பற்றி முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு கவர்னர் தமிழிசை கூறினார்.