உள்ளூர் செய்திகள்
புதுவையில் கொரோனாவுக்கு மேலும் 5 பேர் பலி-பொதுமக்கள் அச்சம்
புதுவையில் கொரோனாவுக்கு மேலும் 5 பேர் பலியாகி உள்ளனர். இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
புதுச்சேரி:
புதுவை மாநிலத்தில் 27-ந்தேதி 4,714 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 1,271 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. புதுவையில் 835 பேரும்,, காரைக்காலில் 303 பேரும், ஏனாமில் 121 பேரும், மாகியில் 12 பேரும் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது ஜிப்மர் மருத்துவமனையில் 33 பேரும், கதிர்காமம் அரசு மருத்துவமனையில் 29 பேரும், அரசு மார்பக நோய் மருத்துவமனையில் 25 பேரும், கோவிட் கேர் சென்டர்களில் 86 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவமனையில் 236 பேர், வீட்டு தனிமையில் 14,057 பேர் என ஒட்டு மொத்தமாக 14,057 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று 2724 பேர் சிகிச்சையில் இருந்து குணமடைந்துள்ளனர்.
புதுவை மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 58 ஆயிரத்து 969 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1 லட்சத்து 42 ஆயிரத்து 755 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.
இதற்கிடையே கொரோனா தொற்றால் 5 பேர் உயிரிழந்துள்ளனர். லாஸ்பேட்டையை சேர்ந்த 52 வயது ஆண், அரியாங்குப்பத்தை சேர்ந்த 38 வயது ஆண், பாகூரை சேர்ந்த 70 வயது முதியவர், ரெட்டியார்பாளையம் 80 வயது மூதாட்டி ஆகியோரும் காரைக்காலை சேர்ந்த 36 வயது ஆணும் இறந்துள்ளனர்.
இந்த தகவல்களை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தொடர்ந்து கொரோனாவின் தாக்கம் குறைந்து வரும் சூழலில் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. இது மக்களிடத்தில் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுவை மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1921 ஆக உயர்ந்துள்ளது.