உள்ளூர் செய்திகள்
கோவிலில் புகுந்து நகை திருடிய வாலிபர் சிக்கினார்
கோவிலில் புகுந்து நகை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:
கிருமாம்பாக்கத்தை அடுத்துள்ள கன்னியக்கோவிலில் பிரசித்தி பெற்ற பச்சைவாழியம்மன் கோவில் உள்ளது.
இக்கோவிலில், கடந்த மாதம் 30-ந் தேதி பூசாரி பூஜைகளை முடித்து விட்டு சாப்பிட சென்றார்.
அப்போது அங்கு வந்த மர்ம ஒருவர், சாமி கும்மிடுவது போல் சிறிது நேரம் நோட்டமிட்டார். பின்னர், யாரும் இல்லாத நேரத்தில், கருவறைக்குள் நுழைந்துஅம்மன் கழுத்தில் இருந்த 9 கிராம் தாலி
செயினை திருடிச் சென்று விட்டார்.
இக்காட்சி கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இது சமூக வலைதளங்களில் வைராலாகி பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்த புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.
மேலும், இது தொடர்பாக, சப்&இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தலைமையில், போலீசார் அய்யனார், துளசி ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். கன்னியக்கோவில், கடலூர், கிருமாம்பாக்கம், தவளக்குப்பம் என மொத்தம் 50-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், சந்தேகத்தின் பேரில், ஒரு வாகனத்தின் பதிவு எண்ணை அடிப்படையாக கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அந்த வாகனம் பண்ருட்டி அருகே திருவதிகையை கிராமத்தை சேர்ந்த பாக்கியராஜ் (39) என்பவருக்கு சொந்தமான என்பது தெரியவந்தது. பெயிண்டரான பாக்கியராஜிதான் கோவிலில் புகுந்து அம்மன் நகையை திருடிச் சென்றது தெரியவந்தது. தலைமறைவாக இருந்து வந்த அவரை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில், முள்ளோடை சந்திப்பில் போலீசார் 26-ந் தேதி வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த பாக்கிராஜை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடமிருந்து அம்மன் நகையை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட பாக்கியராஜ் மீது ஏற்கனவே வானூர், கோட்டக்குப்பம், மங்கலம் ஆகிய போலீஸ் நிலையங்களில் கோவில் உண்டியல் உடைப்பு வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.