உள்ளூர் செய்திகள்
தொடர் வேலை நிறுத்த போராட்டம்- அங்கன்வாடி ஊழியர்கள் அறிவிப்பு
நிலுவை சம்பளம் வழங்கா விட்டால் தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று அங்கன்வாடி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
புதுச்சேரி:
புதுவை அங்கன்வாடியில் உள்ள பழைய நிரந்தர பணியாளர்களுக்கு நவம்பர், டிசம்பர் மாதம் சம்பளம் வழங்கப்படவில்லை.
இதேபோல் புதிதாக பணி நிரந்தரம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு செப்டம்பர் மாதம் முதல் சம்பளம் வழங்கப்படவில்லை. இதனிடையே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க முதல்-அமைச்சர் பரிந்துரை செய்தும் போனஸ் வழங்கப்படவில்லை.
இதனை கண்டித்தும், சம்பளத்தை வழங்க கோரியும் புதுவை அரசு ஊழியர் சங்கத்துடன் இணைந்து அங்கன்வாடி ஊழியர் சங்கத்தினர் 27-ந் தேதி சாரம் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்க தலைவர் ராஜலட்சுமி தலைமை தாங்கினார். செயலாளர் தாட்சாயிணி, பொருளாளர் முருகவேணி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
27-ந் தேதி மாலைக்குள் சம்பளம் வழங்காவிட்டால் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.