உள்ளூர் செய்திகள்
மக்கள் மகிழ்ச்சியோடு வாழும் சூழலை ஏற்படுத்தி வருகிறோம் ரங்கசாமி பெருமிதம்
மக்கள் மகிழ்ச்சியோடு வாழும் சூழலை ஏற்படுத்தி வருகிறோம் என்று தியாகிகளை கவுரவிக்கும் நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசினார்.
புதுச்சேரி:
குடியரசு தினத்தையொட்டி அரசு சார்பில் தியாகிகளை கவுரவிக்கும் நிகழ்ச்சி தாவரவியல் பூங்காவில் நடந்தது.
தியாகிகளுக்கு இனிப்பு வழங்கி முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-
சுதந்திர போராட்ட வீரர்கள் தங்கள் இன்னுயிரை பொருட்படுத்தாமல் அடி, உதைபட்டு பெற்றுத்தந்த விடுதலையால் நாட்டில் மக்கள் சிறப்பாக வாழ்ந்து வருகின்றனர்.
உலக அரங்கில் நம் நாடு தலைசிறந்த நாடாக எல்லோரும் வியந்து பாராட்டும் நாடாக மாறி உள்ளது. ஏழை, எளிய மாணவர்கள் நன்றாகவும், விரும்பிய பாடத்தை படிக்கவும் புதுவை அரசு உயர்கல்வி வரை இலவச கல்வி அளித்து வருகிறது.
புதுவையில் அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சி யோடு வாழும் சூழலை அரசு உருவாக்கி உள்ளது. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுத்து வருகிறோம்.
போலீசார் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். சுகாதாரத்துறையில் காலியாக உள்ள டாக்டர், செவிலியர், தொழில்நுட்ப ஊழியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது.
அனைத்து அரசு துறையிலும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம். பல தொழிற்சாலைகளை உருவாக்கும் சூழலையும், சுற்றுலாவை மேம்படுத்தியும் வருவாயை உயர்த்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்யும் பணியை அரசு செய்து வருகிறது. கொரோனா தொற்று பெரும் சவாலாக உள்ளது. யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என அரசு சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தடுப்பூசி போடுவதால் தொற்று பாதிப்பு மிக குறைவாக ஏற்படும். எனவே அனைவரும் தடுப்பூசி போட்டு தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம், கென்னடி எம்.எல்.ஏ., கலெக்டர் வல்லவன், செய்தி விளம்பரத்துறை இயக்குனர் கந்தன், வேளாண்துறை இயக்குனர் பாலகாந்தி உள்பட பலர் பங்கேற்றனர்.