உள்ளூர் செய்திகள்
ஓசியில் பெட்ரோல் கேட்டு அண்ணன் தம்பியை தாக்கி கொலை மிரட்டல்
ஓசியில் பெட்ரோல் கேட்டு அண்ணன் தம்பியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர்கள் குறித்து போலீசார் விசாரண நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
பாகூர் அடுத்த அரங்கனூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ஞானமூர்த்தி (வயது38). கட்டிட தொழிலாளி.
இவர் தனது தம்பி ஞானசேகருடன் கரிக்கலாம்பாக்கம் சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அரங்கனூர் பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது அதே பகுதி சேலியமேடு கிராமத்தை சேர்ந்த வேலு மகன் பிரபு என்கிற பிரபாகரன், அவரது கூட்டாளிகள் அருண், அருள் ஆகியோர் அங்கு நின்று கொண்டிருந்தனர்.
அப்போது தெரிந்த நபர்கள் என கருதி ஞானமூர்த்தி, பிரபுவிடம் ஏன் இங்கு நிற்கிறீர்கள் என கேட்டார். அதற்கு வண்டியில் பெட்ரோல் தீர்ந்து விட்டது, அதனால் நிற்கிறோம் என கூறினார்.
மேலும் பிரபு, ஞானமூர்த்தியிடம் உன்னுடைய மோட்டார் சைக்கிளிலிலிருந்து பெட்ரோல் எடுத்து தறுமாறு கேட்டார். அதற்கு என் வண்டியில் இருந்து எடுக்க முடியாது, அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடுமாறு கூறினார்.
இதில் ஆத்திரமடைந்த பிரபு மற்றும் அவரது நண்பர்கள் ஞானமூர்த்தியை அசிங்கமாக திட்டி கையாலும், தடியாலும் கடுமையாக தாக்கினர். மேலும் எங்களிடம் வைத்துக்கொண்டால் உன்னையும் உன் தம்பியையும் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த ஞானமூர்த்தி மற்றும் ஞானசேகர் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து பாகூர் போலீஸ் ஏட்டு ராதாகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து பிரபாகரன், அருண்,அருள் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றார்.