உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

கொரோனா பாதித்த குடும்பத்துக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணம்: அன்பழகன் வலியுறுத்தல்

Published On 2022-01-20 05:36 GMT   |   Update On 2022-01-20 05:36 GMT
கொரோனா பாதித்த வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பத்துக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி: 

புதுவை அ.தி.மு.க. கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுவை மாநிலத்தில் கொரோனா தொற்று உச்சநிலைக்கு செல்கிறது. பரிசோதனை செய்பவர்களில் 40 சதவீதத்துக்கு மேல் தொற்று கண்டறியப்படுகிறது. தேவைப்படும் அனை வருக்கும் பரிசோதனை செய்வதை அரசு உறுதி செய்ய வேண்டும். 

அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனி குழுக்கள் அமைத்து பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். முடிவுகளை உடனுக்குடன் அறிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பரிசோதனை முடிவு வருவதற்குள் அந்த குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தொற்று ஏற்படுகிறது. 

பரிசோதனை முடிவுகள் உடனுக்குடன் வழங்க உரிய கட்டமைப்பு வசதிகளை கவர்னர் ஏற்படுத்த வேண்டும்.  கூடுதல் வருவாயை மட்டும் கருத்தில் கொண்டு அரசு நிர்வாகம் செயல்பட்டதால் புதுவை மாநிலம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று சமூக பரவலாக மாறியுள்ளது. 

அரசு அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்கள் பணிக்கு வந்தால் போதும் என அரசு முடிவெடுத்துள்ளது.  அதே வேளையில் பஸ் நிலையம், உழவர் சந்தை, சண்டே மார்க்கெட், சுற்றுலாத்தலங்கள், காய்கறி, மீன், அங்காடிகள் ஆகிய பல்வேறு இடங்களில் மக்கள் அதிகமாக கூடுவதை தடுக்க உரிய அறிவிப்புகளை வெளியிட வேண்டும். 

தொற்று பாதித்தவர்களை வீட்டு தனிமையில் இருக்க அறிவுறுத்துவதால் குடும்பத்தினரும் பாதிக்கப்படுகின்றனர். கூலிதொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், கட்டட தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர் கள், விவசாயிகள், மீன்பிடித் தொழிலாளர்கள் என வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தினர் தொற்றால் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனர். 

எனவே முதல்-அமைச்சர் உண்மை நிலையை உணர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்துக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணம்  வழங்க வேண்டும். 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News