உள்ளூர் செய்திகள்
சப்- கலெக்டர் முன்னிலையில் உடல் வெப்ப பரிசோதனை நடந்த போது எடுத்த படம்

ஒமைக்ரான் எதிரொலி: தமிழக எல்லையான ஜூஜூவாடி பகுதியில் தீவிர கண்காணிப்பு

Published On 2021-12-17 14:47 IST   |   Update On 2021-12-17 14:47:00 IST
தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத வாகன ஓட்டிகள், பயணிகள், பஸ்களில் பயணிப்பவர்கள கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

ஓசூர்:

தமிழகத்தில் ஒருவருக்கு, ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கர்நாடக மாநிலத்தில் 3 பேருக்கு உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், கர்நாடக- தமிழக மாநில எல்லைகளில் வாகன ஓட்டிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தமிழக எல்லையான ஜூஜூவாடி சோதனைச் சாவடியில், தமிழகத்திற்குள் நுழையும் வாகனங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மேலும், வாகன ஓட்டிகளுக்கு, சுகாதாரத் துறையினர் உடல் வெப்பநிலை பரிசோதனையையும் மேற் கொண்டனர்.

இந்த நிலையில், ஓசூர் சப்-கலெக்டர் தேன்மொழி, நேற்று மாநில எல்லையில், இந்த பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ஓசூர் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அலுவலர்கள் இருந்தனர்.

மாநில எல்லையில் வாகன ஓட்டிகளின் உடல் வெப்ப நிலையை பரிசோதித்தும், வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத வாகன ஓட்டிகள், பயணிகள், பஸ்களில் பயணிப்பவர்கள கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இதையொட்டி, எல்லையிலேயே தடுப்பூசி முகாம்கள் அமைத்து, தடுப்பூசி செலுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்றும், மாநில எல்லையில் வாகன போக்குவரத்து தீவிரமாக கண்காணிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News