உள்ளூர் செய்திகள்
சிறை தண்டனை

இளம்பெண் தற்கொலை வழக்கில் கணவர், மாமியாருக்கு 10 ஆண்டு சிறை

Published On 2021-12-16 08:14 GMT   |   Update On 2021-12-16 08:14 GMT
சாமல்பட்டியில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவர், மாமியாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி கோர்ட்டுதீர்ப்பு அளித்துள்ளது.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம், சாமல்பட்டியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 29). இவருக்கும், ராயக்கோட்டையை சேர்ந்த முருகன் மகள் பிரியங்கா (22) என்பவருக்கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. திருமணம் ஆன சில நாட்களில் இருந்தே கணவர் கார்த்திக், இவரது தாயார் மாதேஸ்வரி (48) ஆகிய 2 பேரும் பிரியங்காவிடம், பெற்றோர் வீட்டில் வரதட்சணை வாங்கி வரச்சொல்லி கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 8-ந் தேதி சாமல்பட்டியில் உள்ள தனது கணவர் வீட்டில் பிரியங்கா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து சாமல்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, கார்த்திக், மாதேஸ்வரி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நேற்று நீதிபதி லதா தீர்ப்பு வழங்கினார். அவர் தனது தீர்ப்பில், கார்த்திக், அவருடைய தாயார் மாதேஸ்வரி ஆகியோருக்கு வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய குற்றத்திற்காக 2 ஆண்டு சிறை தண்டனையும், வரதட்சணை கொடுமையால் மரணம் அடைய செய்த குற்றத்திற்காக 10 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.6 ஆயிரம் அபராதமும், கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்.இந்த தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பளித்தார். இதையடுத்து கார்த்திக், அவரது தாயார் மாதேஸ்வரி ஆகியோரை போலீசார் பலத்த பாதுகாப்புடன் வேலூர் மத்திய சிறைக்கு அழைத்து சென்று அடைத்தனர்.
Tags:    

Similar News