உள்ளூர் செய்திகள்
மூங்கில்துறைப்பட்டு அருகே விவசாயி வீட்டில் நகை,பணம் கொள்ளை
மூங்கில்துறைப்பட்டு அருகே விவசாயி வீட்டில் நகை,பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூங்கில்துறைப்பட்டு:
கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள கானாங்காடு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் விவசாயி ராஜேஷ்கண்ணா(வயது 51). சம்பவத்தன்று இவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 50 பவுன் நகை, 13 கிலோ வெள்ளி, ரூ.23 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து வடபொன்பரப்பி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய மர்ம நபர்களை பிடிப்பதற்காக துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன் தலைமையில், இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் உலகநாதன், திருமால், ஜெயச்சந்திரன் ஆகியோரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு பகுதிகளுக்கு பிரிந்து சென்று தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.