உள்ளூர் செய்திகள்
ஓசூரில் 2 வீடுகளில் 10 பவுன் நகை, பணம் திருட்டு
ஓசூரில் 2 வீடுகளில் 10 பவுன் நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா பேகேப்பள்ளி மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் அமீர்கான் (வயது 42). உத்தனப்பள்ளியில் உள்ள தனியார் நிறுவனத்தில் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று அவர் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். மீண்டும் வந்து பார்த்த போது வீட்டு கதவு உடைக்கப்பட்டு இருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த 8 பவுன் தங்க நகைகள், ரூ.37 ஆயிரம் ஆகியவை திருட்டு போனது தெரிந்தது. இதுகுறித்து அமீர்கான் சிப்காட் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஓசூர் முத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நாகராஜி ராவ் (47). தனியார் நிறுவன காவலாளி. சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு வாணியம்பாடியில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றார். மீண்டும் அவர் வீட்டிற்கு வந்து பார்த்த போது கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 2 பவுன் தங்க நகைகள், வெள்ளி கொலுசு, பணம் திருட்டு போனது தெரிந்தது.
இதுகுறித்து நாகராஜி ராவ் ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். ஓசூர் பகுதியில் 2 வீடுகளில் நகை, பணம் திருட்டு போன சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.