செய்திகள்
17 பேர் முழு உடல் தானம் - மருத்துவ கல்லூரி டீன் பாராட்டு
விழிப்புணர்வு ஏற்படுத்தவே ஆண்டுதோறும் தேசிய உடல் தானம் அனுசரிக்கப்படுகிறது.
திருப்பூர்:
தேசிய உடலுறுப்பு தானத்தை முன்னிட்டு திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரிக்கு முழு உடல் தானம் வழங்கிய 17 பேருக்கு கல்லூரி டீன் சான்றிதழ் வழங்கினார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு அ.தி.மு.க., பல்லடம் தகவல் தொழில் நுட்ப பிரிவை சேர்ந்த 17 பேர் கடந்த பிப்ரவரி 24-ந்தேதி திருப்பூர் மருத்துவ கல்லூரிக்கு தங்களை முழு உடலை தானமாக வழங்கினர்.
உடலுறுப்பு தான தினத்தன்று இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக திருப்பூர் மருத்துவ கல்லூரி டீன் முருகேசன், உடல் தானம் வழங்கியவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
மருத்துவ கல்லூரி டீன் முருகேசன் பேசுகையில்:
மருத்துவ துறையிலும், பல்வேறு தொழில் நுட்பம் வந்து விட்டன. உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளவும், அறுவை மாற்று சிகிச்சை செய்யவும் மருத்துவர்களுக்கும், மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கும் உடல்கள் தேவைப்படுகிறது.
இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே ஆண்டுதோறும் தேசிய உடல் தானம் அனுசரிக்கப்படுகிறது. இத்தினத்தில் முழு உடலை தானம் செய்ய பலரும் முன்வர வேண்டும் என்றார்.