செய்திகள்
கோப்புபடம்

ஆத்துப்பாளையம் தடுப்பணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

Published On 2021-11-25 05:26 GMT   |   Update On 2021-11-25 05:26 GMT
திருப்பூர் சாயக்கழிவு தண்ணீர் அதிக அளவு கலந்து நொய்யல் ஆற்றில் சென்றதால் பாசன கால்வாய்க்கு தண்ணீர் திறந்து விடுவது கடந்த 2004ம் ஆண்டுக்கு பிறகு நிறுத்தப்பட்டது.
காங்கேயம்:

நொய்யல் ஆற்றில் இருந்து செல்லும் தண்ணீர் காவிரியுடன் கலந்து தண்ணீர் சென்றது. எனவே பாசனத்திற்கு பயன்படும் வகையில் நொய்யல் ஆற்றில் 1992ம் ஆண்டு ரூ.13.51 கோடி செலவில் சின்ன முத்தூர் பகுதியில் தடுப்பணை கட்டப்பட்டது. 

இதிலிருந்து கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகாவில் உள்ள 300 ஏக்கர் பரப்பளவுள்ள அணைப்பாளையம் குளத்துக்கும், ஊட்டுக்கால்வாய் 20 ஆயிரம் ஏக்கர் பாசனம் பயன்பெறும் வகையில் உள்ளது.

கடந்த 2000ம் ஆண்டில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. திருப்பூர் சாயக்கழிவு தண்ணீர் அதிக அளவு கலந்து நொய்யல் ஆற்றில் சென்றதால் பாசன கால்வாய்க்கு தண்ணீர் திறந்து விடுவது கடந்த 2004ம் ஆண்டுக்கு பிறகு நிறுத்தப்பட்டது. மழை காலத்தில் நொய்யல் ஆற்றில் வரும் வெள்ளநீரை பாசனத்திற்கு திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

தற்போது நொய்யல் நீர் பிடிப்பு பகுதியில் கன மழை பெய்ததால் வெள்ளம் ஏற்பட்டது. பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடக்கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து 3-வது ஆண்டாக, கடந்த 7-ந் தேதி ஊட்டுக்கால்வாய் வழியாக 250 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

இதையடுத்து கார்வழி அருகே உள்ள அணைப்பாளையம் அணை நிரம்பியது. இதைத்தொடர்ந்து அரவக்குறிச்சி, க.பரமத்தி, கரூர் தாலுகாவில் உள்ள பாசன நிலங்களுக்கு கடந்த 15-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்தது.

தற்போது நொய்யல் ஆற்றில் மழை நீர் வந்து கொண்டிருப்பதால் 2ம் முறையாக, முத்தூர் தடுப்பணையில் 16 அடிக்கு தேக்கப்பட்டு, ஊட்டுக்கால்வாய் வழியாக 200 கன அடி வீதமும், நொய்யல் ஆற்றுக்கு 300 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு செல்கிறது. நொய்யல் ஆற்று வெள்ளநீர் பாசனத்துக்கு திறந்து விடப்பட்டதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News