செய்திகள்
அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது -அதி கனமழைக்கு வாய்ப்பு
வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு வடமேற்கு திசையில் இலங்கை மற்றும் தென் தமிழகத்தை நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சென்னை:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 25 நாட்களில் 2 காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நல்ல மழை பொழிவை கொடுத்துள்ளது. கடந்த 5-ந்தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் பலத்த மழை கொட்டியது. இதனால் ஏரி, குளங்கள் அனைத்தும் நிரம்பின. கடந்த 10 நாட்களாக பெய்த கனமழையால் பல்வேறு மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு வடமேற்கு திசையில் இலங்கை மற்றும் தென் தமிழகத்தை நோக்கி நகரக்கூடும் என்றும், இதன் காரணமாக நவம்பர் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.