செய்திகள்
திருப்பூர் மும்மூர்த்திநகரில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த செல்வராஜ் எம்.எல்.ஏ.,
மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காத வகையில் நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் எம்.எல்.ஏ., உறுதியளித்தார்.
திருப்பூர்:
திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ் தொகுதிக்குட்பட்ட பகுதியில் ஆய்வு செய்து வருகிறார். அதனடிப்படையில் இன்று காலை திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மும்மூர்த்தி நகர் பகுதியில் மழைநீர் தேங்கி நின்று பொதுமக்கள் அவதிப்பட்டு வருவதை அறிந்த திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ் இன்று காலை நேரடியாக சென்று ஆய்வு செய்தார்.
பின்னர் மாநகராட்சி அதிகாரிகளை உடனடியாக வரவைத்து அங்கு தேங்கி நின்ற மழைநீர் மற்றும் சகதிகளை உடனடியாக அப்புறப்படுத்தி பொதுமக்கள் நடந்து செல்வதற்கு ஏதுவாக மாற்றி அமைக்க உத்தரவிட்டார். இந்த பகுதியில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காத வகையில் நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாகவும் அந்த பகுதியில் பொதுமக்களிடம் உறுதியளித்தார்.
இந்த ஆய்வின் போது திருப்பூர் மாநகர பொறுப்பாளர் டி.கே.டி. நாகராஜ், வடக்கு மாநகர் பொறுப்பாளர் தினேஷ் குமார், இளைஞர் அணி அமைப்பாளர் தங்கராஜ், உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.