மழை வெள்ளத்தில் பாதுகாக்க மீஞ்சூர்-மணலி சாலையில் ஏராளமான வாகனங்கள் வரிசையாக நிறுத்தம்
பொன்னேரி:
தொடர் மழை காரணமாக பூண்டி ஏரி நிரம்பி வழிகிறது. ஏரியில் இருந்து கொசஸ்தலை ஆற்றில் அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.
இதனால் மீஞ்சூரை அடுத்த நாப்பாளையம் பாலத்தை தொட்டபடி தண்ணீர் பாய்ந்து செல்கிறது. இதனை பார்க்க அதிக அளவில் பொதுமக்கள் குவிந்து வருவதால் அப்பகுதி சுற்றுலாதலமாகமாறி உள்ளது.
வெள்ள நீர் வெள்ளி வாயல் விச்சூர், மணலி புதுநகர் பகுதியில் ஊருக்குள் புகுந்து உள்ளது. இதனால் அப்பகுதியில் வசிப்பவர்கள் தங்களது கார்களை பாதுகாப்புக்காக மீஞ்சூர் மணலி சாலையில் வரிசையாக நிறுத்தி வைத்துள்ளனர். சுமார் 200-க்கும் மேற்பட்ட கார்கள் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டு உள்ளன. வெள்ள நீர் சூழந்த இடங்களில் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள்.
மீஞ்சூரை அடுத்த சுப்பாரெட்டி பாளையம் ஊராட்சி அருகே கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் தரைப்பாலம் மூழ்கி உள்ளது. இதனால் ஆற்றை கடக்க முடியாமல் மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியே செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் ஆற்றில் படகு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. அரசு அதிகாரிகள் யாரும் இங்கு வந்து தேவையான உதவிகள் செய்யவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.