செய்திகள்
வானிலை நிலவர படம்

சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்

Published On 2021-11-18 15:42 GMT   |   Update On 2021-11-18 16:02 GMT
காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து 100 கி.மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள நிலையில், சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி பின்பு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது. இன்று காலை நிலவரப்படி, சென்னையில் இருந்து தென்கிழக்கு திசையில் 340 கி.மீ., தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மையம் கொண்டிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் கூறப்பட்டது.

ஆனால், அதற்கு முன்பாகவே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதன் காரணமாக, தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, சேலம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை ஆகிய 16 மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்திருந்தது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையை நோக்கி நகர்ந்த வண்ணம் உள்ளது.

தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தெற்கே, தென்கிழக்கு திசையில் 100 கி.மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. 18 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை- புதுச்சேரி இடையே சென்னை அருகே நாளை அதிகாலை கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ் பெறப்படுகிறது. அதற்குப் பதிலாக ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது என வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News