செய்திகள்
தற்கொலை

சாத்தூர் அருகே ரெயில் முன் பாய்ந்து டிரைவர் தற்கொலை

Published On 2021-11-16 10:03 GMT   |   Update On 2021-11-16 10:03 GMT
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ரெயில் முன் பாய்ந்து டிரைவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தூர்:

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தண்டவாள ரெயில் பாதையில் ஆண் உடல் ஒன்று கிடைப்பதாக தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

உடனே அங்கு சென்ற போலீசார் தூத்துக்குடி ரெயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த ரெயில்வே போலீசார் உடலை கைப்பற்றி சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

போலீஸ் விசாரணையில் பிணமாக கிடந்தவர் சாத்தூர் அருகே உள்ள சடையம்பட்டி சேர்ந்த கருப்பசாமி என்பவரது மகன் மாரீஸ்வரன் (வயது30) வேன் டிரைவர் என்பது தெரிய வந்தது.

நேற்று முன்தினம் இவரது தம்பிக்கு திருமணம் நடந்த நிலையில் மாரீஸ்வரன் ரெயில் தண்டவாளத்தில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரீஸ்வரன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்று முன்தினம் திருமணம் முடிந்த வீட்டில் இறப்பு நிகழ்ச்சி நடந்தது அவர்களது குடும்பத்தில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News