செய்திகள்
கரையை கடந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம்: ரெட் அலர்ட் வாபஸ்
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று இரவு கரையை கடந்தது. இதனால் சென்னையில் மழை குறைய ஆரம்பித்துள்ளது.
வங்க கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திரா- வட தமிழகம் இடையே சென்னை அருகில் கரையை கடக்கும் என வானிமை மையம் தெரிவித்திருந்தது. 20 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், பின்னர் 4 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்தது. அப்போது சென்னையில் இருந்து 80 கி.மீட்டர் தொலைவில் தாழ்வு மண்டலம் நிலை கொண்டிருந்தது.
சற்று நேரம் சென்ற பின்னர், கடந்த 6 மணி நேரத்தில் 16 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மாலை 5.30 மணி அளவில் கரையை கடக்க தொடங்கியுது.
அப்போது மழை மற்றும் காற்றின் வேகம் குறைந்தது. அதற்கு முன் கனமழையுடன் காற்றும் வீசி வந்தது. இந்த நிலையில் இரவு 8 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் முழுமையாக கரையை கடந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அத்துடன் சென்னைக்கு விடப்பட்ட ரெட் அலர்ட் விலக்கிக் கொள்ளப்பட்டது.