செய்திகள்
கோப்புபடம்

சமூகவலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை - விவசாயிகள் மனு

Published On 2021-11-10 06:05 GMT   |   Update On 2021-11-10 06:05 GMT
பி.ஏ.பி., 4-ம் மண்டல பாசனத்தில் மருள்பட்டி, மலையாண்டிகவுண்டனூர், கருப்பட்டி பாளையம், சாளரப்பட்டி பகுதியில் 1484 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
உடுமலை:

உடுமலை சுற்றுப்புற பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. சாகுபடி பணிகளுக்கு திருமூர்த்தி, அமராவதி அணைகள் கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறுகள் நீராதாரமாக உள்ளது.

அதை ஆதாரமாகக் கொண்டு காய்கறிகள், கீரைவகைகள்,தானியங்கள் மற்றும் நீண்டகால பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இந்தநிலையில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை யொட்டி உடுமலை சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இதனால் சாகுபடி செய்யப்பட்ட பயிர்களுக்கு தண்ணீர் தேவை ஏற்படவில்லை. இதை சாதகமாக கொண்டு உடுமலையை அடுத்த மருள்பட்டி குளத்திற்கு தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஆர்.டி.ஓ கீதாவிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.

இதுகுறித்து மனுவில் கூறியுள்ளதாவது:

பி.ஏ.பி., 4-ம் மண்டல பாசனத்தில் மருள்பட்டி, மலையாண்டிகவுண்டனூர், கருப்பட்டி பாளையம்,சாளரப்பட்டி பகுதியில் 1484 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. 

இந்தப் பகுதியில் மழை பெய்யும் போது பாசன நீரை வீணடிக்காமல் மருள்பட்டி குளத்திற்கு கொண்டு சென்று தேக்கி வைப்பது வழக்கமான ஒன்றாகும். இதனால் பாப்பான்குளம், கண்ணம்மநாயக்கனூர், ஆண்டிகவுண்டனூர் ஊராட்சிகளில் குடிநீர் தேவை பூர்த்தி அடைவதுடன் நிலத்தடி நீர் இருப்பும் உயர்ந்து வரும்.

ஆனால் ஒரு சில விவசாயிகள் மருள்பட்டி குளத்திற்கு தண்ணீர் எடுப்பதால் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் தண்ணீர் பற்றாக்குறையால் கருகி வருவதாக பொய்யான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.

தற்போது பருவமழையும் நல்லமுறையில் பெய்து வருகிறது. இதனால் பயிர்களுக்கும் தண்ணீர் பாய்ச்ச வேண்டிய அவசியம் இல்லை. இதை சாதகமாக கொண்டு 4-ம் மண்டல பாசனம் பெறுகின்ற பகுதியிலுள்ள அனைத்து குளங்களுக்கும் தண்ணீர் வழங்க வேண்டும். 

மேலும் சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்களை பரப்பி வருகின்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

அதைத் தொடர்ந்து உடுமலை தாலுகா அலுவலகத்திற்கு சென்ற விவசாயிகள் தாசில்தார் ராமலிங்கத்திடம் குளங்களுக்கு தண்ணீர் வழங்குமாறு மனு அளித்தனர். இது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார். அதை தொடர்ந்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.
Tags:    

Similar News