செய்திகள்
விபத்து

செய்யாறு அருகே கார்- வேன் மோதி தாத்தா, பேரன் பலி

Published On 2021-11-08 09:50 GMT   |   Update On 2021-11-08 09:50 GMT
செய்யாறு அருகே கார் மற்றும் வேன் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் தாத்தா, பேரன் பலியானார்கள்.

வெம்பாக்கம்:

காஞ்சிபுரம் அடுத்த வையாவூரை சேர்ந்தவர் இளங்கோ (வயது 33). இவரது மனைவி சுகன்யா (30). இவர்களுக்கு விஷ்வா (8), என்ற மகனும், நிலா (5), கமலி (3) என மகள்கள் உள்ளனர்.

இளங்கோவின் சித்தப்பா குழந்தைவேலு (60), அவரது மனைவி புஷ்பா ஆகியோர் இன்று காலை திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அடுத்த மாமண்டூரில் நடைபெறும் உறவினர் வீட்டு திருமணத்திற்காக காரில் புறப்பட்டு வந்தனர். காரை இளங்கோ ஓட்டி வந்தார்.

மாமண்டூர் அருகே உள்ள 3 கண் பாலத்தில் கார் வந்த போது பெரணமல்லூரில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் கம்பெனி வேனும், இளங்கோ ஓட்டிச் சென்ற காரும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது.

வேன் மோதிய வேகத்தில் சாலையோரம் உள்ள பள்ளத்தில் கார் கவிழ்ந்தது. காரின் இடிபாடுகளில் சிக்கி குழந்தைவேலு, விஸ்வா ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இளங்கோ, சுகன்யா, நிலா, கமலி, புஷ்பா ஆகிய 5 பேர் படுகாயமடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த வெம்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


Tags:    

Similar News