செய்திகள்
ஸ்மார்ட் வகுப்பு-தன்னார்வ அமைப்புகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுகோள்
உடுமலை கல்வி மாவட்டத்தில் கணக்கம்பாளையம் நகராட்சி பள்ளி, பாலப்பம்பட்டி துவக்கப்பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:
உடுமலை பகுதியில் சில தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள்தொடங்கப்பட்டுள்ளன.தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளிலும் டிஜிட்டல் தொழில்நுட்பம் வாயிலாக மாணவர்கள் கற்பிக்கப்படுகின்றனர்.
ஸ்மார்ட் வகுப்புகளால் மாணவர்களின் கல்வி மீதான நாட்டம் அதிகரிப்பதாகவும், படங்களைக்காட்டி அவற்றின் பெயர்களை கூறச்செய்தல், மனப்பாடப் பகுதிகளை ராகத்துடன் பாடும் வீடியோக்களை பார்க்கச்செய்தல் உள்ளிட்டவைகளால் உற்சாகம் அடைவதாகவும் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
அவ்வகையில் உடுமலை கல்வி மாவட்டத்தில் கணக்கம்பாளையம் நகராட்சி பள்ளி, பாலப்பம்பட்டி துவக்கப்பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஸ்மார்ட் கிளாஸ் கட்டமைப்பு உருவாக்க தன்னார்வ அமைப்புகள் முன்வந்தால் அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
வழக்கமான முறையில் ஆசிரியர் பாடம் நடத்தும் போது அனைத்து மாணவர்களை ஈர்க்க முடியாத சூழல் இருக்கும். திரை வழியே கற்பிக்கும் போது அனைவரையும் ஈர்க்க முடியும். மாணவர்களுக்கு செயல்வழியாகவும் மனதில் எளிமையாக பாடங்களை பதிய வைப்பதற்கும் ஸ்மார்ட் கிளாஸ் பெரிதும் உதவுகிறது.
அவ்வகையில் தன்னார்வ அமைப்புடன் இணைந்து கணக்கம்பாளையம் நடுநிலைப்பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. பிற பள்ளிகளிலும், ஸ்மார்ட் கிளாஸ் உருவாக்கத்திற்கு தன்னார்வ அமைப்புகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.