செய்திகள் (Tamil News)
மனைவியின் கல்லறையில் திராவகம் குடித்து முதியவர் தற்கொலை
நாகர்கோவில் அருகே மனைவி இறந்த துக்கத்தில் அவரது கல்லறையில் முதியவர் திராவகம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டம் காட்டாத்துறையை அடுத்த நெடியான்கோட்டை சேர்ந்தவர் செல்லப்பன் (வயது 75). இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். செல்லப்பனின் மனைவி முத்தாபரணம். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
மனைவி இறந்ததில் இருந்து செல்லப்பன் மிகுந்த மனவேதனையுடன் இருந்து வந்தார். மேலும், யாரிடமும் சரியாக பேசாமல் இருந்து வந்தார். சில நாட்கள் வீட்டின் அருகில் உள்ள மனைவியின் கல்லறையின் அருகிலேயே தூங்கியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் வெளியே சென்ற செல்லப்பன் அதன் பிறகு வெகுநேரமாகியும் வீட்டுக்கு திரும்பவில்லை. அப்போது, கல்லறையின் அருகே ரப்பர் ஷீட் தயாரிக்க பயன்படுத்தும் திராவகத்தை குடித்து விட்டு செல்லப்பன் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே, அவருடைய மகன் ராஜேஷ் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி செல்லப்பன் பரிதாபமாக இறந்தார்.
மனைவி இறந்த துக்கத்தில் அவரது கல்லறை அருகில் முதியவர் திராவகம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.