செய்திகள்
காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியவர்கள் கயிறு கட்டி மீட்கப்பட்ட காட்சி.

செங்கம் குப்பநத்தம் அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 50 பேர் மீட்பு

Published On 2021-11-06 15:58 IST   |   Update On 2021-11-06 15:58:00 IST
செங்கம் குப்பநத்தம் அருகே அருவிக்கு குளிக்க சென்று காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிக் கொண்டவர்களை தீயணைப்புத்துறையினர் கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.
புதுப்பாளையம்:

செங்கம் அருகே குப்பநந்தம் துரிஞ்சாபுரம் நாமக்கல் நீர்வீழ்ச்சி உள்ளது. தொடர் மழையால் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அருவியில் குளித்து மகிழ சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்துள்ளது.

தீபாவளி பண்டிகையையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவிக்கு நேற்று வந்துள்ளனர். சுமார் 50-க்கும் மேற்பட்டோர் அருவியில் குளித்து கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென பலத்த மழை பெய்தது. இதனால் அங்குள்ள காட்டாற்றில் வெள்ளம் பாய்ந்தோடி சென்றது. அருவிக்கு குளிக்க சென்றவர்கள் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். அவர்கள் செய்வதறியாது தவித்தனர்.

இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் வெள்ளத்தில் சிக்கியவர்களை கயிறு கட்டி மீட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

அருவிக்கு செல்லும் வழியில் பாதுகாப்பான சூழ்நிலை இல்லாததால் இந்த பகுதிக்கு சுற்றுலா பயணிகள் கவனமுடன் செல்லுமாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Tags:    

Similar News