செய்திகள்
கோப்புப்படம்

பொள்ளாச்சியில் 5-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை

Published On 2021-11-06 09:26 GMT   |   Update On 2021-11-06 09:26 GMT
பொள்ளாச்சியில் 5-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கோவை:

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்தவர் கிரிநாத் (வயது 21). இவர் அதே பகுதியில் தேங்காய் உரிக்கும் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் கிரிநாத் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த 5-ம் வகுப்பு மாணவியிடம் நட்பாக பழகி வந்தார். அப்போது அவர் அந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக தெரிகிறது.

அதனை அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். அப்போது அவர்கள் கிரிநாத்தை கண்டித்தனர். இந்த நிலையில் சம்பவத்தன்று அந்த மாணவி வீட்டின் அருகே உள்ள கடைக்கு சென்றார்.

அப்போது அங்கிருந்த கிரிநாத் மீண்டும் அந்த மாணவியிடம் கன்னத்தை கிள்ளி தனது வீட்டுக்கு வருமாறு சில்மி‌ஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி வீட்டுக்கு ஓடிச் சென்று பெற்றோரிடம் நடந்தவற்றை கூறினார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தந்தை அவரது நண்பர் ஒருவரை அழைத்து கொண்டு கிரிநாத் வீட்டிற்கு சென்றார். அங்கு இருந்த கிரிநாத்தை அவர்கள் சரமாரியாக தாக்கினர்.

அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.

போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து கிரிநாத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதேபோன்று சிறுமியின் தந்தை மற்றும் அவரது நண்பர் தாக்கியதாக கிரிநாத் ஆனைமலை போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News