செய்திகள்
குண்டேரிபள்ளம் அணை

குண்டேரிபள்ளம் அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றம்- கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

Published On 2021-11-05 15:59 IST   |   Update On 2021-11-05 15:59:00 IST
அணையின் நீர்பிடிப்பு மலைப்பகுதிகளான, குன்றி, மல்லியம்மன் துர்க்கம், விளாங்கோம்பை, கம்மனூர், கடம்பூர் போன்ற பகுதிகளில் தொடர்ந்து பெய்த கனமழையால் குண்டேரிப்பள்ளம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணை நிரம்பியது.
டி.என்.பாளையம்:

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட கொங்கர்பாளையம் கிராமத்தில் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது குண்டேரிப்பள்ளம் அணை. குண்டேரிப்பள்ளம் அணையானது 42 கனஅடி கொள்ளளவு கொண்டது.

அணையின் நீர்பிடிப்பு மலைப்பகுதிகளான, குன்றி, மல்லியம்மன் துர்க்கம், விளாங்கோம்பை, கம்மனூர், கடம்பூர் போன்ற பகுதிகளில் தொடர்ந்து பெய்த கனமழையால் குண்டேரிப்பள்ளம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணை நிரம்பியது.

இந்நிலையில், குன்றி, கம்மனூர், விளாங்கோம்பை மற்றும் கல்லூத்து ஆகிய வனப்பகுதியில் நேற்று நள்ளிரவு பெய்த கனமழையால் குண்டேரிப்பள்ளம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணை நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இன்று காலை 6 மணி நிலவரப்படி அணையில் இருந்து வினாடிக்கு 600 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இந்த தண்ணீர் கொங்கர்பாளையம் ஊராட்சி பகுதியில் கட்டப்பட்டுள்ள இரண்டு செக் டேம் வழியாக பவானி ஆற்றில் கலக்கிறது. இதனால் கரையோர மக்களுக்கு பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை சார்பில் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது அணையில் இருந்து அதிகளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆனாலும் சிலர் ஆபத்தை உணராமல் மீன் பிடித்து வருகின்றனர்.

நிரம்பி வழியும் குண்டேரிபள்ளம் அணையில் ஆபத்தை உணராமல் சிலர் மீன் பிடித்த காட்சி.

Tags:    

Similar News