செய்திகள்
மழை

தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய கனமழை எச்சரிக்கை

Published On 2021-11-05 07:56 GMT   |   Update On 2021-11-05 11:17 GMT
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதன் ஒட்டிய பகுதியில் வரும் நவம்பர் 9ம் தேதி அன்று புதியதாக குறைந்த காற்றுழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: 

மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனையொட்டிய ஆந்திர கடலோர பகுதிகளில் நிலவக்கூடிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, நாமக்கல், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர் ஆகிய 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும், மற்ற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும்  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், வரும் 9ம் தேதி வரை தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையை பொருத்தவரை, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரப் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. 



மேலும், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதன் ஒட்டிய பகுதிகளில், வரும் நவம்பர் 9ம் தேதி அன்று புதியதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால்,  ஆந்திரா, கேரளா, கர்நாடகா கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று வீச இருப்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags:    

Similar News