செய்திகள்
தற்கொலை

கோவையில் 4-வது மாடியில் இருந்து குதித்து என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை

Published On 2021-11-03 10:53 GMT   |   Update On 2021-11-03 10:53 GMT
கோவையில் 4-வது மாடியில் இருந்து குதித்து என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:

கோவை கீரநத்தத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் மோகன்குமார். இவரது மகன் சரண் (வயது 18). இவர் மதுக்கரையில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சரணின் வீட்டிற்கு அவரது சகோதரி தனது 4½ வயது பெண் குழந்தையுடன் வந்து இருந்தார். சம்பவத்தன்று இவர் தனது சகோதரியின் குழந்தையுடன் அந்த பகுதியில் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக சென்றார். பின்னர் வீட்டிற்கு திரும்பினார்.

இதனை பார்த்த சரணின் பாட்டி நிர்மலா கொரோனா பரவல் தொடர்ந்து உள்ளதாலும், மழை பெய்து வருவதாலும் குழந்தையை வெளியே எதற்காக கொண்டு சென்றாய் என கேட்டார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்து நிர்மலா சரணின் பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் அவருக்கு அறிவுரை கூறினர். இதனால் சரண் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். வீட்டில் இருந்த அவர் திடீரென வாழ்க்கையில் விரக்தி அடைந்து 4 மாடியில் இருந்து கீழே குதித்தார். இதனை பார்த்து அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சிறிது நேரத்தில் சரண் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து கோவில் பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News