செய்திகள்
காவலர்கள்

காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை -அரசாணை வெளியீடு

Published On 2021-11-03 13:43 IST   |   Update On 2021-11-03 13:43:00 IST
காவலர்கள் தங்கள் உடல் நலனைப் பேணிக் காத்திட ஏதுவாகவும், தங்களது குடும்பத்தாருடன் போதிய நேரம் செலவிடுவதற்காகவும் வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்கப்படுகிறது.
சென்னை:

தமிழகத்தில் காவலர்கள் விடுமுறை இல்லாமல் 24 மணி நேரமும் தொடர்ந்து பணியில் இருப்பதால் அவர்களுக்கு கடும் மன அழுத்தம் ஏற்படுகிறது. பலர் மன அழுத்தத்தில் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால் வாரத்தில் ஒரு நாள் விடுமுறை வழங்க வேண்டும் என்று காவலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

அவர்களின் நீண்டநாள் கோரிக்கையை அரசு நிறைவேற்றியிருக்கிறது. வாரத்தில் ஒரு நாள் விடுமுறை வழங்கப்படும் என அரசு அறிவித்தது. இதற்கான அரசாணை இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.



இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-

தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் 13-9-2021 அன்று நடைபெற்ற காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், காவலர்கள் தங்கள் உடல் நலனைப் பேணிக் காத்திட ஏதுவாகவும், தங்கள் குடும்பத்தாருடன் போதிய நேரம் செலவிடுவதற்காகவும், இரண்டாம் நிலை காவலர்கள் முதல் தலைமைக் காவலர்கள் வரையிலான காவலர் அனைவருக்கும் வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்கப்படும் என அறிவித்தார்.

இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக, காவலர்கள் தங்கள் உடல் நலனைப் பேணிக் காத்திட ஏதுவாகவும், தங்களது குடும்பத்தாருடன் போதிய நேரம் செலவிடுவதற்காகவும், இரண்டாம் நிலை காவலர் முதல் தலைமைக் காவலர் வரையிலான காவலர்  அனைவருக்கும் 
வாரத்தில் ஒருநாள் ஓய்வு
 வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று உத்தரவிட்டுள்ளார். அதற்கான அரசாணை இன்றைய தினம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காவலர்களின் நலனை கருத்தில் கொண்டு, முதலமைச்சர் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு, காவல் பணியில் இடையறாது ஈடுபட்டு சவாலான பணிகளை எதிர்கொள்ளும் காவலர்களுக்கு அருமருந்தாக விளங்குவதோடு, புத்துணர்ச்சியோடும் உற்சாகத்தோடு தங்கள் பணியினை அவர்கள் மேற்கொள்ள வழிவகுக்கும். 

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News