அரக்கோணம் கட்டிட தொழிலாளி கொலையில் 3 வாலிபர்கள் கைது
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த அவினாசிகண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் அருண் (32). கட்டிடத் தொழிலாளி.
இவர், கடந்த 22-ந்தேதி வீட்டுக்கு வராத நிலையில் அதே பகுதியில் உள்ள கோவிலுக்கு அருகில் பிணமாக கிடந்தார். அருணுக்கு மதுப்பழக்கம் இருப்பதால் மதுபோதையில் கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டு இறந்திருக்கலாம் என கூறப்பட்டது.
இதற்கிடையில், அருண் சில நபர்களால் அடித்து கொலை செய்யப்பட்டார் என்ற குரல் பதிவு வாட்ஸ்அப்களில் வேகமாக பரவியது. இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என கோரி அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையத்தில் அருணின் தந்தை கோவிந்தராஜ் புகார் அளித்தார்.
அதன்பேரில், அருணின் உடலை போலீசார் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்தனர்.
இந்த வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக மோசூர் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் (23) என்பவரை போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.
அப்போது அவர் முன் விரோத பகை காரணமாக மோசூரைச் சேர்ந்த நண்பர் மாயாண்டி (35) மற்றும் அவினாசிகண்டிகை கிராமத்தை சேர்ந்த நண்பர் தரணி (35) ஆகியோருடன் சேர்ந்து அருணை கல்லால் தாக்கி கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, மாயாண்டி மற்றும் தரணியை போலீசார் கைது செய்தனர். தொடர் விசாரணையில் கடந்த 22-ந்தேதி இரவு ஏற்பட்ட தகராறில் 3 பேரும் சேர்ந்து மதுபோதையில் இருந்த அருணை கல்லால் தாக்கி கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர்.
அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.