செய்திகள்
மாயம்

நாகையில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 3 மீனவர்கள் மாயம்- உறவினர்கள் கவலை

Published On 2021-10-28 16:06 IST   |   Update On 2021-10-28 16:06:00 IST
மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 3 பேர் மாயமாகி உள்ளதால் அவர்களின் கதி என்ன? என்று தெரியாமல் உறவினர்கள் கவலை அடைந்துள்ளனர்.
வெளிப்பாளையம்:

நாகையை அடுத்த புதிய கல்லார் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 30). இவருக்கு சொந்தமான பைபர் படகில் அவரும், அதே பகுதியை சேர்ந்த பொன்னப்பன்(60), முருகவேல்(50) ஆகிய 3 மீனவர்களும் கடந்த 24-ந் தேதி காலையில் கல்லார் பகுதியில் இருந்து மீன்பிடிக்க கோடியக்கரை நோக்கி சென்றனர்.

இவர்கள் கடந்த 25-ந் தேதி கரை திரும்பி இருக்க வேண்டும். ஆனால் நேற்று வரையில் மீனவர்கள் கரை திரும்பி வரவில்லை. இதையடுத்து மீனவர்களின் உறவினர்கள் படகு உரிமையாளர் ராஜ்குமாரை செல்போனில் தொடர்பு கொண்டனர். ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

இதனால் ராஜ்குமார் மற்றும் மீனவர்களின் உறவினர்கள் கல்லார் பஞ்சாயத்தார் ராமச்சந்திரனிடம் தகவல் தெரிவித்தனர். பின்னர் இதுகுறித்து நாகை கடலோர பாதுகாப்பு குழும போலீசாரிடம் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 3 பேர் மாயமாகி உள்ளதால் அவர்களின் கதி என்ன? என்று தெரியாமல் உறவினர்கள் கவலை அடைந்துள்ளனர்.

Similar News