திருவண்ணாமலையில் குறைந்த பட்சம் ரூ.3000 உதவித்தொகை வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை:
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் சார்பில் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ரமேஷ் பாபு தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் சத்யா முன்னிலை வகித்தார். இதில் உயர வளர்ச்சி தடைபட்டோரை கடும் ஊனமுற்றோராக அறிவித்து திட்டங்களில் முன்னுரிமை வழங்க வேண்டும். உயர வளர்ச்சி தடைபட்டோர் வசிக்க ஏற்ற வகையில் அரசு வீடுகளை கட்டிக் கொடுக்க வேண்டும்.
சிறப்பு கவனம் செலுத்தி இவர்களுக்கான வேலை வாய்ப்புகளை பெற்றுத் தரவேண்டும். மாதாந்திர உதவித்தொகை குறைந்தபட்சம் ரூ.3000 வழங்க வேண்டும். மாவட்ட தலைநகரங்களில் உணவு வசதியுடன் கூடிய சிறப்பு தங்கும் விடுதிகள் கட்டித்தர வேண்டும். அரசு பஸ்களில் மாநிலம் முழுவதும் இலவச பஸ் பயண வசதி வழங்கிட வேண்டும்.
கேலி, கிண்டல் செய்வதை தடுக்க விழிப்புணர்வு பிரசாரங்களை செய்யவேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.