செய்திகள்
கோப்புப்படம்

ஆரணி அருகே அண்ணனை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற தம்பி

Published On 2021-10-22 07:06 GMT   |   Update On 2021-10-22 07:06 GMT
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சொத்து தகராறில் அண்ணனை பெட்ரோல் ஊற்றி கொன்ற தம்பியை போலீசார் கைது செய்தனர்.
ஆரணி:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள விளைசித்தேரி கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளை. இவருக்கு ரமேஷ், புருஷோத்தமன், ராஜசேகர் என 3 மகன்கள் உள்ளனர்.

புருஷோத்தமன் நெசவு தொழில் செய்து வந்தார். திருமணமாகி மனைவியை 6 வருடங்களாக பிரிந்து தனியாக வசித்து வந்தார்.

ரமேஷ் மற்றும் ராஜசேகர் சென்னையில் பணிபுரிந்து வருகின்றனர். குடும்பத்தின் பூர்வீக சொத்தாக வீடு உள்ளது. 3 மகன்களுக்கு சொத்தை பிரித்து கொடுத்துள்ளனர்.

இதில் புருஷோத்தமனுக்கு சொத்தின் பங்கை கொடுப்பதாக கூறி 7 லட்சம் ரூபாயில் முதல் தவனைணயாக ரூ.1 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

மீதி தொகையை கொடுக்க ராஜசேகர் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனால் இருவருக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தன்று புருஷோத்தமன் ராஜசேகரின் பைக்கை எடுத்து ஓட்டியுள்ளார்.

பைக்கை எப்படி எடுத்து செல்லலாம் என்று ராஜசேகர் புருஷோத்தமனிடம் கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இது தொடர்பாக நேற்று முன்தினம் அண்ணன், தம்பி இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராஜசேகர் புருஷோத்தமன் வீட்டு மாடியில் தூங்கி கொண்டிருந்த போது அவரது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார்.

தீயில் கருகிய புருஷோத்தமன் அலறி அடித்து ஓடினார். அப்போது மாடியில் இருந்து கீழே தவறி விழுந்தார்.

படுகாயமடைந்த புருஷோத்தமனை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கபட்டார். இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி புருஷோத்தமன் பரிதாபமாக இறந்தார்.

ஆரணி தாலுகா போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து ராஜசேகரை கைது செய்தனர்.
Tags:    

Similar News