செய்திகள்
திருட்டு

மளிகை கடையில் ரூ.1 லட்சம் பணம் திருட்டு- போலீசார் விசாரணை

Published On 2021-10-15 10:32 GMT   |   Update On 2021-10-15 10:32 GMT
புதுவை மூலக்குளத்தில் மளிகை கடையில் ரூ.1 லட்சம் ரொக்கப்பணம், மளிகை பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:

புதுவை மூலகுளம் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகரில் வசித்து வருபவர் பரமேஸ்வரி.

இவர் தனது வீட்டின் பக்கத்து தெருவில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று ஆயுதபூஜை என்பதால் கடையில் பூஜை செய்து விட்டு இரவு மளிகை கடையை பூட்டி விட்டு சென்றுள்ளார்.

இந்த நிலையில் இன்று காலை மளிகை கடை திறந்து இருப்பதாக அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் பரமேஸ்வரிக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து பரமேஸ்வரி பதறியடித்துக்கொண்டு தனது கடைக்கு விரைந்து வந்து பார்த்தார்.

அப்போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த மளிகை பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

கடையில் வைத்து இருந்த ரூ.1 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் 50 ஆயிரம் மதிப்புள்ள சிகரெட் பாக்கெட், அரிசி மூட்டைகள் உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் திருடப்பட்டிருந்தது.

இதனையடுத்து பரமேஸ்வரி திருட்டு சம்பவம் குறித்து ரெட்டியார்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News