செய்திகள்
விபத்து

சிவகாசியில் மோட்டார் சைக்கிள்கள் மோதல்: தந்தை-மகள் பலி

Published On 2021-09-29 10:43 GMT   |   Update On 2021-09-29 10:43 GMT
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இன்று காலை மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் தந்தை மற்றும் மகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சிவகாசி:

விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஏ.லெட்சுமியாபுரம் ரிசர்வ் லைன் காலனியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 40). இவரது மனைவி வெங்கடேஷ்வரி, மகள் முத்துலட்சுமி (8), மகன் முனிபாண்டி (7).

இன்று காலை 9 மணிக்கு முருகன் குடும்பத்தினருடன் மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து புறப்பட்டார். அவர்கள் சிவகாசி டவுன் பகுதிக்கு செல்ல திட்டமிட்டனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் உள்ள போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்தபோது எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிள் வந்தது. எதிர்பாராதவிதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் முருகன், அவரது மனைவி வெங்கடேஷ்வரி, மகள் முத்துலட்சுமி, மகன் முனிபாண்டி ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர். மேலும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த விஸ்வநத்தம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஹரீஷ்நாத்தும் காயமடைந்தார்.

விபத்தை கண்ட அக்கம், பக்கத்தினர் விரைந்து வந்து சாலையில் கிடந்தவர்களை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் சிறுமி முத்துலட்சுமி சம்பவ இடத்திலேயே பலியாகி விட்டாள்.

மற்ற 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முருகன் பரிதாபமாக இறந்தார். வெங்கடேஷ்வரி, முனிபாண்டி, ஹரீஷ்நாத் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

காயமடைந்த ஹரீஷ்நாத் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கல்லூரியில் எம்.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மோட்டார் சைக்கிள் விபத்தில் தந்தை-மகள் பலியான சம்பவம் சிவகாசி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News