செய்திகள்
அருப்புக்கோட்டையில் கழிவுநீருடன், மழைநீரும் கலந்து சாலையில் தேங்கி நின்றதை காணலாம்

அருப்புக்கோட்டையில் இடி, மின்னலுடன் பலத்த மழை

Published On 2021-09-27 10:25 GMT   |   Update On 2021-09-27 10:25 GMT
அருப்புக்கோட்டையில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
அருப்புக்கோட்டை:

குலாப் புயல் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று காலை முதலே கடும் வெயில் வாட்டி வதைத்து வந்தது.

திடீரென மாலை நேரத்தில் கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்து. பின்னர் சிறிது நேரத்தில் மழை பெய்யத் தொடங்கியது. அருப்புக்கோட்டை, பாலையம்பட்டி, ஆத்திபட்டி, ராமசாமிபுரம், காந்திநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கன மழை பெய்தது. இந்த கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், விருதுநகர் ரோடு, ரெயில்வே பீடர் ரோடு, மதுரை ரோடு உள்ளிட்ட நகரின் பல இடங்களில் வாருகால் நிறைந்து மழைநீர் செல்ல வழியின்றி சாக்கடை நீருடன் மழை நீர் கலந்து சாலைகளில் தேங்கி நின்றது.

இதன் காரணமாக பொதுமக்களும், இருசக்கர வாகன ஓட்டிகளும் கடும் அவதி அடைந்தனர். இதனால் சுகாதார கேடும் ஏற்பட்டுள்ளது. எனினும் நீண்ட நாட்களுக்கு பின் பெய்த கன மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News