செய்திகள்
மாயம்

நண்பர்களுடன் கிணற்றில் குளிக்க சென்ற பள்ளி மாணவன் மாயம்

Published On 2021-09-22 07:27 GMT   |   Update On 2021-09-22 07:27 GMT
நண்பர்களுடன் கிணற்றில் குளிக்க சென்ற பள்ளி மாணவன் மாயமானதையடுத்து அவனை தேடும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்
சிவகாசி:

சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் கிராமத்தில் உள்ள கம்மவார் காலனியை சேர்ந்த கருப்பசாமி மகன் வெற்றிவேல் (வயது14). இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்தநிலையில் நேற்று சிவகாசி-விளாம்பட்டி ரோட்டில் உள்ள ஒரு கிணற்றில் நண்பர்களுடன் குளிக்க சென்றார். குளித்துக் கொண்டிருந்த அவர் திடீரென மாயமானார். இதை தொடர்ந்து சிவகாசி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, பின்னர் விருதுநகரில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நவீன நீர்மூழ்கி கேமராவை கொண்டு இரவு 8 மணி வரை மாணவனை தேடினர். அதன் பின்னர் கிணற்றில் இருக்கும் தண்ணீரை ராட்சத மோட்டார் மூலம் வெளியேற்றி மாணவனை தேடும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். இந்த பணி இரவில் நீண்ட நேரம் நீடித்தது.

மாயமான மாணவன் கதி என்னவென்று தெரியாததால் அவருடைய பெற்றோர், குடும்பத்தினர் பரிதவித்தனர்.


Tags:    

Similar News