செய்திகள்
தற்கொலை முயற்சி

ராஜபாளையம் அருகே 2 குழந்தைகளுடன் கணவன்-மனைவி தற்கொலை முயற்சி

Published On 2021-09-21 10:50 GMT   |   Update On 2021-09-21 10:50 GMT
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே வாழ்க்கையில் வெறுப்படைந்த கணவன், மனைவி 2 குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.
ராஜபாளையம்:

ராஜபாளையம் அருகே உள்ள மேலூர் துரைசாமிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் குமார் (வயது 36). இவரது மனைவி தேவி (33). இவர்களுக்கு குருதர்ஷினி (7), தேவதர்ஷினி (1) ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.

குமார் கேரளாவில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார். இதனால் குடும்பத்துடன் அங்கேயே வசித்துவந்தார். அப்போது அங்கு ரூ.10 லட்சம் ஒத்திக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர்.

தற்போது ஊருக்கு வந்த அவர்கள், வீட்டை காலி செய்துவிட்டனர். ஆனால் வீட்டு உரிமையாளர் ரூ. 10 லட்சத்தை திருப்பி தரவில்லை என கூறப்படுகிறது.

இதனால் மனம் உடைந்த குமார், வாழ்க்கையில் வெறுப்படைந்து தற்கொலை செய்ய முடிவு செய்தார். தான் இறந்துவிட்டால் குடும்பம் நிற்கதியாகிவிடும் என கவலைப்பட்ட அவர், மனைவி மற்றும் குழந்தைகளுக்கும் வி‌ஷம் கொடுக்க திட்டமிட்டார்.

அதன்படி மனைவியிடம் தனது நிலையை கூறியுள்ளார். பின்னர் கணவனும், மனைவியும் இரு குழந்தைகளுக்கும் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து கொடுத்துள்ளனர். பின்னர் தாங்களும் அதனை குடித்துவிட்டனர்.

இன்று காலை 4 பேரும் நீண்ட நேரமாக வெளியே வராததால் அக்கம் பக்கத்தினர் பார்த்த போதுதான் வி‌ஷம் குடித்திருப்பது தெரியவந்தது. உடனடியாக குமார் மற்றும் அவரது மனைவி உள்பட 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சேத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News