செய்திகள்
கோப்புபடம்

வில்லியனூர் அருகே தொழிலாளி வீட்டில் நகை-பணம் கொள்ளை

Published On 2021-09-18 10:10 GMT   |   Update On 2021-09-18 10:10 GMT
வில்லியனூர் அருகே தொழிலாளி வீட்டில் நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

புதுச்சேரி:

வில்லியனூர் அருகே அரியூர் அனந்தபுரம் பாரதி வீதியை சேர்ந்தவர் ராமதாஸ். கூலி தொழிலாளி. இவரது மனைவி இந்திரா (வயது40). நேற்று முன்தினம் ராமதாஸ் சவுக்கு மிளா ஏற்றுவதற்காக மேல்மருவத்தூர் சென்றிருந்தார்.

இரவு வீட்டில் இந்திராவும், அவரது மகளும் தூங்கிக்கொண்டிருந்தனர். காற்றுக்காக வீட்டின் கதவை பூட்டாமல் திறந்து வைத்திருந்தனர்.

நள்ளிரவு திடீரென வீட்டில் இருந்து சத்தம் கேட்கவே இந்திரா எழுந்து சென்று பார்த்தார். அப்போது வீட்டின் பின்வாசல் வழியாக ஒரு மர்மநபர் ஓடினார். உடனே சந்தேகமடைந்த இந்திரா வீட்டின் அறைக்கு சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பீரோவில் வைத்திருந்த ரூ.1 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் 5 பவுன் நகையை காணவில்லை. மர்மநபர் வீட்டின் கதவை திறந்து வைத்திருந்ததை நோட்டமிட்டு நகை- பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டார். இதன் மொத்த மதிப்பு ரூ.2½ லட்சம் ஆகும்.

இதுகுறித்து இந்திரா வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபரை தேடி வருகிறார்கள். 

Tags:    

Similar News