செய்திகள்
கொரோனா வைரஸ்

புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு 100-க்கு கீழ் குறைந்தது

Published On 2021-09-18 02:42 GMT   |   Update On 2021-09-18 02:42 GMT
புதுவையில் கொரோனா பாதிப்பு 1.70 சதவீதமாகவும், உயிரிழப்பு 1.46 சதவீதமாகவும், குணமடைவது 97.81 சதவீதமாகவும் உள்ளது.
புதுச்சேரி:

புதுவையில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 5 ஆயிரத்து 57 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 86 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 256 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது ஆஸ்பத்திரிகளில் 158 பேர், வீடுகளில் 761 பேர் என 919 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 129 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்தநிலையில் ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்த புதுவை ராஜா நகரை சேர்ந்த 68 வயது மூதாட்டி பலியானார். இவரை சேர்த்து பலி எண்ணிக்கை 1,828 ஆனது. புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு 100-க்கு மேல் இருந்தது. பலியும் அதிகரித்த நிலையில் நேற்று தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 100-க்கு கீழ் வந்தது.

புதுவையில் கொரோனா பாதிப்பு 1.70 சதவீதமாகவும், உயிரிழப்பு 1.46 சதவீதமாகவும், குணமடைவது 97.81 சதவீதமாகவும் உள்ளது. நேற்று முன்தினம் சுகாதார பணியாளர்கள் 4 பேர், பொதுமக்கள் 1,601 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். இதுவரை 8 லட்சத்து 88 ஆயிரத்து 894 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News