செய்திகள்
மரணம்

தவளக்குப்பம் அருகே பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் வாலிபர் பிணம்

Published On 2021-09-17 10:57 GMT   |   Update On 2021-09-17 10:57 GMT
தவளக்குப்பம் அருகே பூட்டிய வீட்டில் வாலிபர் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார்.

பாகூர்:

தவளக்குப்பம் அருகே பூரணாங்குப்பம் காமராஜர் சாலை பகுதியை சேர்ந்தவர் மகேஷ் (வயது 36). திருமணமாகாத இவர் டிரைவர் வேலை செய்து வந்தார்.

கடந்த சில மாதங்களாக கொரோனா காரணமாக வேலை சரியாக இல்லாததால் மகேஷ் குடிப்பழக்கத்துக்கு அடிமையானார்.

மகேசுக்கு தவளக்குப்பம் வி.ஐ.பி. கார்டன் பகுதியில் சொந்தமாக வீடு உள்ளது. இந்த வீட்டில் மகேஷ் வசித்து வந்தார்.

இந்த நிலையில் மகேஷ் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் தவளக்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். வீடு பூட்டி இருந்ததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது வீட்டின் கழிவறை பகுதியில் மகேஷ் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். அவர் இறந்து 2 நாட்களுக்கு மேலாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

குடிபோதையில் அவர் தவறி விழுந்ததால் இறந்து போய் இருக்கலாம் என தெரிகிறது.

இதுகுறித்து அவரது சகோதரர் யுவராஜ் கொடுத்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News