சிங்கம்புணரி சுடுகாட்டில் கொலை: வெட்டு காயத்துடன் பிணமாக கிடந்தவர் யார்? போலீசார் விசாரணை
சிங்கம்புணரி:
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி சுடுகாட்டில் தலையில் வெட்டு காயத்துடன் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணமாக கிடந்தார். அவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிங்கம்புணரியை சுற்றி பொது குளியல் தொட்டிகளில் தண்ணீர் இல்லாததால் இந்தப்பகுதி இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் சிங்கம்புணரி சுடுகாட்டில் உள்ள நீர்தொட்டியில் குளிப்பார்கள்.
இன்று காலை குளிக்க சென்ற ஒருவர் அங்கு தலையில் வெட்டுக்காயத்துடன் கிடந்தவரை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இது குறித்து சிங்கம்புணரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆய்வாளர் சீராளன் சம்பவ இடத்தை பார்வை யிட்டு விசாரணை நடத்தினார். அவர் கூறுகையில், இறந்த நபரின் இரத்தம் இன்னும் உறையாத நிலையில் இருப்பதால் இந்த சம்பவம் அதிகாலையில் நடந்திருக்கலாம் என தெரிவித்தார்.
கொலையாளிகள் இறந்த நபரை தலையில் தாக்கிவிட்டு பின்னர் முகத்தை சிதைத்து அருகில் கிடந்த குப்பை மற்றும் துணிகளை போட்டு எரிக்க முயற்சித்துள்ளனர்.
டிப்-டாப் உடையுடன் இருப்பதால் இவர் வைத்திருந்த பணம் அல்லது நகைக்காக கொலை செய்திருக்க வாய்ப்பு உள்ளதா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக சிங்கம்புணரி தாலுகா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.