செய்திகள்
கீழடி அகழாய்வில் கிடைத்த பொருட்களை ஆவணப்படுத்தும் பணி
கீழடி அகழாய்வில் கிடைத்த பொருட்களை ஆவணப்படுத்தும் பணி தீவிரம் அடைந்து உள்ளது.
திருப்புவனம்:
திருப்புவனம் யூனியனை சேர்ந்த கீழடியில் 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. இத்துடன் சேர்த்து கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதிகளிலும் குழிகள் தோண்டி பணிகள் நடைபெற்று வருகிறது. கீழடியில் சேதமுற்ற சிறிய பெரிய பானைகள், மண்பாண்ட ஓடுகள், சிறுவர்கள் விளையாடும் சில்லுவட்டுகள், தந்தத்தால் ஆன தாயக்கட்டை, பெண்கள் காதில் அணியும் தங்க ஆபரணம் உள்பட பல பொருட்கள் கிடைத்துள்ளன.. இதேபோல் கொந்தகையில் 20-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள், 10-க்கும் மேற்பட்ட மனித முழு உருவ எலும்புக்கூடுகள் ஆகியவை கண்டறியப்பட்டன. முதுமக்கள் தாழிகளை ஆய்வு செய்ததில் உள்ளே இருந்து மனித மண்டை ஓடு, விலா எலும்பு, தசை எலும்பு, கை-கால் எலும்பு, சிறிய மண் கிண்ணம், இரும்பினால் ஆன வாள், மற்றும் கருப்பு சிவப்பு கலரில் சிறிய பானைகள் உள்பட பல பொருட்கள் கண்டறியப்பட்டன. அகரத்தில் சிறிய -பெரிய நத்தை ஓடுகள், சேதமுற்ற நிலையில் சிறிய -பெரிய பானைகள், சுடுமண் உறை கிணறுகள் உள்பட பல பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கீழடியில் கண்டுபிடிக்கபட்ட பொருட்களை ஆவணப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் வரைபடம் மூலம் குழியில் பொருட்கள் கிடைத்த உயரம், அகலம் ஆகியவை குறித்தும் கிடைத்த பொருட்களில் நீளம், அகலம் குறித்தும் அளவீடு செய்யப்பட்டு ஆவணப்படுத்துதல் பணி நடைபெற்று வருகிறது. 7 கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளுக்கு இந்த மாதம் முடிய அரசு அனுமதி வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.