செய்திகள்
விநாயகர் சிலைகளை வைத்திக்குப்பம் கடற்கரையில் பொதுமக்கள் கரைத்த காட்சி.

வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளை கடலில் கரைத்த பொதுமக்கள்

Published On 2021-09-13 02:39 GMT   |   Update On 2021-09-13 02:39 GMT
விநாயகர் சதுர்த்தி விழா பேரவை சார்பில் நாளை விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற உள்ளது.
புதுச்சேரி:

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 10-ந் தேதி கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் புதுவையில் இந்து முன்னணி மற்றும் விநாயகர் சதுர்த்தி விழா பேரவை சார்பில் 240-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. அந்த சிலைகளுக்கு தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதேபோல் பொதுமக்கள் பலர் சிறிய விநாயகர் சிலைகளை வாங்கி தங்கள் வீடுகளில் வைத்து வழிபாடு நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளை பொதுமக்கள் வைத்திக்குப்பம், பாண்டி மெரினா, பழைய துறைமுகம், குருசுக்குப்பம் கடற்கரைக்கு பாதுகாப்பாக எடுத்து வந்தனர். பின்னர் அங்கு சிறப்பு பூஜைகள் செய்து கடலில் கரைத்தனர். நகர பகுதியில் வைத்திருந்த பெரிய அளவிலான ஒரு சில சிலைகளும் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.

விநாயகர் சிலைகளை கரைத்த நேற்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் பெரும்பாலான மக்கள் அசைவ உணவுகளை தவிர்த்தனர். இதனால் இறைச்சி, மீன் கடைகளில் நேற்று மக்கள் கூட்டம் வழக்கத்தை விட குறைவாகவே காணப்பட்டது.

விநாயகர் சதுர்த்தி விழா பேரவை சார்பில் நாளை (செவ்வாய்க்கிழமை) மதியம் 1 மணிக்கு விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற உள்ளது. காமராஜர் சாலையில் தொடங்கும் இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று கடற்கரைகளில் கரைக்கப்படுகிறது. இதற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறை செய்து வருகிறது.
Tags:    

Similar News