செய்திகள்
கலைவாணர் அரங்கம்

விநாயகர் சதுர்த்தியையொட்டி சட்டசபைக்கு 3 நாட்கள் விடுமுறை

Published On 2021-09-09 04:52 GMT   |   Update On 2021-09-09 04:52 GMT
காவல்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு திங்கட்கிழமை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசுகிறார். அன்றுடன் கூட்டம் நிறைவு பெறுகிறது.
சென்னை:

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த மாதம் 13-ந்தேதி தொடங்கியது. அன்று பொது பட்ஜெட்டும், 14-ந் தேதி வேளாண்மைக்கென்று தனி பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. அதன் பிறகு ஒவ்வொரு நாளும் அமைச்சர்களின் துறைவாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

அரசு விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் தவிர்த்து தினமும் சட்டசபை கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் நாளை விநாயகர் சதுர்த்தி அரசு விடுமுறை நாளாகும். இதையொட்டி சனிக்கிழமையும் சட்டசபைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் தொடர்ச்சியாக சட்டசபைக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

இன்றைய கூட்டம் முடிந்த பிறகு 3 நாட்கள் விடுமுறை என்பதால் வெளியூர் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கிறார்கள்.



வருகிற 13-ந்தேதி (திங்கட்கிழமை)யுடன் சட்டசபை கூட்டம் நிறைவு பெறுகிறது. அன்று கடைசி நாள் கூட்டமாகும். முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் உள்ள துறைகள் மீதான மானிய கோரிக்கை விவாதம் இன்று தொடங்குகிறது.

காவல்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு திங்கட்கிழமை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசுகிறார். அன்றுடன் கூட்டம் நிறைவு பெறுகிறது.

Tags:    

Similar News