செய்திகள்
கைது

சிறுமியின் ஆபாச படத்தை சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக மிரட்டிய வாலிபர் கைது

Published On 2021-08-26 11:04 IST   |   Update On 2021-08-26 11:04:00 IST
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே சிறுமியின் ஆபாச படத்தை சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக மிரட்டிய வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பெருந்துறை:

சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மகன் ராஜ்கமல் (20). இவருக்கும் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள பிச்சாண்டார்பாளையம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமிக்கும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவர்கள் இருவரும் வீடியோ கால் மூலம் அடிக்கடி பேசி உள்ளனர். ஒரு கட்டத்தில் சிறுமியின் ஆபாச வீடியோவை ராஜ்கமல் தனது செல்போனில் பதிவு செய்து கொண்டார்.

ஆபாச வீடியோ குறித்து ராஜ்கமல் அந்த சிறுமியிடம் கூறி மிரட்டி பேசி வந்தார். அதோடு இல்லாமல் சிறுமியின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு உங்கள் மகளின் ஆபாச வீடியோ படத்தை நான் வைத்துள்ளேன். இதை பேஸ்புக் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டி உள்ளார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் பெருந்துறை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் தங்கம் வழக்குப்பதிவு செய்து ராஜ்கமலை பிடித்து விசாரித்தார். மேலும் செல்போனையும் கைப்பற்றி ஆய்வு செய்தார். இதில் ராஜ்கமல் சிறுமியை மிரட்டியது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து ராஜ்கமல் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஈரோடு சிறையில் அடைத்தனர்.

Similar News