செய்திகள்
ஈரோட்டில் கனமழை

ஈரோடு மாவட்டத்தில் இடியுடன் கொட்டிய கனமழை

Published On 2021-08-21 15:06 IST   |   Update On 2021-08-21 15:06:00 IST
பெருந்துறை, விஜயமங்கலம், ஈங்கூர், திங்களூர் மற்றும் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் ரோடுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் நேற்று பகல் முழுவதும் வழக்கம்போல் வெயில் கொளுத்தியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

இந்தநிலையில் இன்று அதிகாலை 3.30 மணி முதல் மாநகர் பகுதியில் மழை பெய்ய தொடங்கியது. முதலில் சாரல் மழையாக பெய்ய தொடங்கிய மழை பின்னர் நேரம் செல்ல செல்ல பலத்த மழையாக பெய்தது.

இடியுடன் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மாநகரில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. இதேபோல் மாநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் தற்போது திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக ரோடுகளில் குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வந்தது.

இந்தநிலையில் திடீரென மழை பெய்ததால் இந்தப் பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. கருங்கல்பாளையம் காவிரி ரோடு பகுதியில் தற்போது வளர்ச்சித் திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. திடீரென பெய்த மழையால் இந்த பகுதியில் தண்ணீர் தேங்கி குண்டும் குழியுமாக ரோடு காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

சென்னிமலை சுற்று வட்டாரப்பகுதிகளில் மாலையில் வானம் கரும் மேகத்துடன் காணப்பட்டது. ஆனால் மழை பெய்யவில்லை. இன்று அதிகாலை முதல் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை காலை வரை நீடித்தது. இதனால் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

இந்த மழை காரணமாக கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவு பணிகள் பாதிக்கப்பட்டது.

பவானி பகுதியில் இன்று அதிகாலை முதலே வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. காலை முதல் மழை தூறியது. நேரம் செல்ல செல்ல பலத்த மழை பெய்தது. தொடர்ந்து மழை தூறி கொண்டே உள்ளது. சித்தோடு, அம்மாபேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது.

பெருந்துறை, விஜயமங்கலம், ஈங்கூர், திங்களூர் மற்றும் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் ரோடுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

மொடக்குறிச்சி, எழுமாத்தூர், நஞ்சை ஊத்துக்குளி, அவல்பூந்துறை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அதிகாலை 4 மணி முதல் பலத்த மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் தொடர்ந்து இன்று காலை வரை மழை பெய்தது.

இதே போல் கோபி, சத்தியமங்கலம், நம்பியூர், சிவகிரி, கவுந்தப்பாடி, தாளவாடி உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. ஆனால் சாரல் மழை மட்டுமே பெய்தது.

ஈரோடு மாவட்டத்தில் பெய்த மழை மில்லி மீட்டரில் வருமாறு:-

ஈரோடு-42, மொடக்குறிச்சி- 31, கவுந்தப்பாடி-18, பவானிசாகர்-3.4, அம்மாபேட்டை- 3.

Similar News