வியாபாரியிடம், போலி டிரஸ்ட் மூலம் பணம் மோசடி - பரமக்குடி பெண் உள்பட 6 பேர் மீது வழக்கு
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள குலசேகரநல்லூரைச் சேர்ந்தவர் சுதன் (வயது 33). இவர் அங்குள்ள காந்தி பஜாரில் பெயிண்ட் கடை நடத்தி வருகிறார்.
சில நாட்களுக்கு முன்பு இவரை சந்தித்த சிலர் அறக்கட்டளை மூலம் வெளிநாடுகளில் இருந்து கடன் பெற்று தருவதாகவும் அதற்கு நீங்கள் சிறிய தொகையை கட்டினால் போதும் என்றும் ஆசைவார்த்தை கூறியுள்ளனர்.
இதனை நம்பி கடந்த ஆண்டு ரூ. 19 ஆயிரத்தை சுதன் கட்டியுள்ளார். அதன் பிறகு ரூ.52 ஆயிரத்து 320 செலுத்தியுள்ளார். இருப்பினும் அவருக்கு கடன் தொகை கிடைக்கவில்லை.
எனவே டிரஸ்ட் பெயரில் வந்தவர்களிடம் சுதன் கேட்டபோது மேலும் ரூ.10 லட்சம் கொடுத்தால் ரூ. 2 கோடி கடன் பெற்றுத் தருவதாக கூறினர். இதனால் சந்தேகமடைந்த சுதன், டிரஸ்ட் அலுவலகம் இயங்கி வரும் இடத்திற்குச் சென்று கேட்டார்.
அப்போது அவருக்கு சரியான பதில் கிடைக்கவில்லை. மேலும் போலியாக டிரஸ்ட் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து அவர் அருப்புக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டிடம் புகார் செய்தார். மேலும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கும தொடர்ந்தார். இதன் அடிப்படையில் அருப்புக்கோட்டை டவுன் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் போலி டிரஸ்ட் அமைத்து பணம் மோசடி செய்ததாக ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அதிரையை சேர்ந்த காளிமுத்து, அம்பிகா, முத்துக்குமார், அருப்புக்கோட்டை தேவகி, பிரியா, விக்னேஷ் குமார் ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.