செய்திகள்
தற்செயல் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு
தற்செயல் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் ரமணசரஸ்வதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியத்தில் காலியாக உள்ள மணகெதி, நாயகனைப்பிரியாள் ஊராட்சி மன்ற தலைவர் பதவியிடங்கள் மற்றும் அம்பாபூர் ஊராட்சிக்கு உட்பட்ட 8-வது வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, தற்செயல் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் ரமணசரஸ்வதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், நடைபெறவுள்ள இத்தேர்தலுக்காக மணகெதி ஊராட்சியில் 3 வாக்குச்சாவடி மையங்களும், நாயகனைப்பிரியாள் ஊராட்சியில் 5 வாக்குச்சாவடி மையங்களும், அம்பாபூர் ஊராட்சியில் 1 வாக்கச்சாவடி மையமும் என 9 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படவுள்ளன. அதன்படி, மணகெதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நாயகனைப்பிரியாள் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, புனித மிக்கேல் உயர்நிலைப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடி மையங்களில் குடிநீர், கழிவறை, மின்சாரம் மற்றும் சாய்வுதளம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், நடைபெறவுள்ள தற்செயல் தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்களின் வசதிகளுக்காக மேற்காணும் வசதிகள் அனைத்தும் நிறைவேற்றிட தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது, என்றார். ஆய்வின்போது, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ரகு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயராஜ், குணசேகரன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.